உலகம் பயிர் செய்யும் இடம் அறுவடை செய்யுமிடம் மறுமையாகும். நல்லது செய்தவன் நன்மையடைவான். தீயது செய்தவன் நஷ்டமடைவான். மறுமையில் நிழலில்லாத கடும் வெயிலின் உஷ்ணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு தினத்தில் அல்லாஹ் ஏழு கூட்டத்தினருக்கு நிழலளிப்பபானென்பதை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் நிழலின்றி வேறு நிழலில்லாத ஒரு தினத்தில் ஏழு கூட்டத்தினருக்கு அல்லாஹ் நிழலளிக்கிறான்.
நேர்மையான தலைவன், அல்லாஹ்வின் வணக்கத்தில் ஈடுபாடுடைய ஒரு வாலிபன், இரு மனிதர்கள் அல்லாஹ்வுக்காகலே ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். அதற்காகவே ஒன்று சேர்ந்தனர். அதற்காகவே பிரிந்தனர். மஸ்ஜிதிலிருந்து வெளியேறினால் மீண்டும் அங்கு வரும்வரை மஸ்ஜிதோடு உள்ளம் தொடர்புடைய ஒரு மனிதர்.
தனிமையில் அல்லாஹ்வின் சிந்தனையில் இரு கண்களிலிருந்தும் கண்ணீர் வடிந்த மனிதன், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஓர் அழகி (தீய செயலுக்காக) அழைக்கும் போது “நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்” என்ற மனிதன், வலது கை கொடுப்பதை இடது கை அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்யும் ஒரு மனிதர். (புகாரி)
மனிதனின் ஆசை தீயதைச் செய்யத்தூண்டும் போதும், பணம், பதவி மமதையில் அநீதியில் ஈடுபட முற்படும் போதும் உள்ளம் அதைத் தடை செய்யும் போது மனிதன் புனிதனாக மாறுகிறான்.
இறையச்சத்தோடு உள்ளத்தை பரிசுத்தமாக வைத்துக் கொள்ளும் மனிதனையே அல்லாஹ் விரும்புகிறான்.
மறுமையில் மக்கள் எல்லோரும் எழுப்பப்பட்டு கேள்வி கணக்குக் கேட்கப்படும் சந்தர்ப்பத்தில் உஷ்ணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத வேளையில் நபியவர்கள் கூறிய அல்லாஹ்வின் நிழலைப் பெறும் ஏழு கூட்டத்தினரையும் சுருக்கமாகப் பார்ப்போம்.
1. நேர்மையான தலைவன்
தலைவர்கள் பலவகைப்படுகின்றனர். ஒரு நாட்டை ஆழ்பவன் ஒரு தலைவன். ஓரு ஊரைப் பராமரிப்பவர் ஒரு தலைவர். வகுப்பாசிரியர் ஒரு தலைவர். ஓர் அதிபர் ஒரு தலைவர். வீட்டைப் பராமரிப்பவர் தொடக்கம் நாட்டை ஆள்பவர் வரை தலைவர்களின் தொகை எண்ணிலடங்கா.
ஆகவே, ஒவ்வொருவரும் தனது தலைமையின் கீழ் உள்ளோருடன் நீதி நியாயமாக நடந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.
பதவி, பணம், உடல் வலிமை இருக்கும் போது தனததிகாரத்தின் கீழிருப்போர் மீது அதிகாரம் வலிமையைத் துஷ்பிரயோகம் செய்வதும் அநீதியிழைப்பதும் அல்லாஹ்வின் கோபத்தை ஏற்படுத்தும். நீதி நியாயமாக நடக்கும் போது அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக்கொள்கிறான்.
2. இறை வணக்கத்திலீடுபடும் வாலிபன்
மனித வாழ்வில் குழந்தைப் பருவம், பிள்ளைப்பருவம், வாலிபப்பருவம், வயோதிபப்பருவம் எனப் பருவத்தைப் பிரிக்கலாம். பருவ வயதை அடைய முன்புள்ள குழந்தைப் பருவம், பிள்ளைப்பருவம் நல்லது கெட்டதை அறியாத, விளங்கிக்கொள்ள முடியாத காலமாகும். அக்காலத்தில் நடைபெறும் தவறுகளுக்கு இறைவன் தண்டனை வழங்குவதில்லை. அவர்கள் மீது தொழுகை, நோன்பு என்பன கடமையுமில்லை.
நாற்பது வயதைத் தாண்டும் போது அதனை வயோதிபப்பருவம் என்கிறோம். அறிவு, அனுபவம் கூடி உடல் வலிமை குறைந்து மறுமையை நினைத்து இறை வணக்கத்திலீடுபடுகின்றான்.
பருவ வயதை அடைந்தது முதல் நாற்பது வயது வரை வாலிபப் பருவமெனலாம். அக்காலம் உடல் வலிமை, துணிவு, தைரியம், பயமின்மை, நான் என்ற மமதை கூடிய காலமாகும். பாவச்செயல்களில் ஈடுபடுவதை துச்சமாக நினைக்கும் இக்காலப் பருவத்தின் இறை வணக்கத்தில் ஈடுபடுவது மிகக்குறைவு. மனதைக்கட்டுப்படுத்துவது கஷ்டமான ஒரு காலத்தில் தியாக உணர்வோடு இறை வணக்கத்தில் ஈடுபடும் ஒரு வாலிபன் அல்லாஹ்வின் விஷேட அருளை மறுமையில் பெறுகிறான்.
3. இறை திருப்தியை விரும்பி ஒருவரை ஒருவர் சேர்ந்து பிரிந்து நடக்கும் இரு மனிதர்.
ஒரு மனிதன் தனக்கெது விருப்பமோ அது இன்னொருவரிடமிருந்து கிடைக்கும் போதும் தன் துயரைத் துடைக்க ஒருவர் முன்வரும் போதும் ஒருவன் இன்னொருவனை நேசிக்கிறான்.
ஆனால் உலக இன்பங்கள் எதுவுமின்றி இறையச்சத்துடன் செயல்படும் ஒரே காரணத்திற்காக ஒருவரை ஒருவர் விரும்பி சோர்ந்தும் பாவச் செயலுக்காகப் பிரிந்தும் நடப்பவர்கள் மறுமையில் அல்லாஹ்வின் அருளுக்குரியவர்களாவர்.
4. மஸ்ஜிதிலிருந்து வெளியேறினால் திரும்பி வரும் வரை மஸ்ஜிதோடு உள்ளம் தொடர்புடைய மனிதன் மஸ்ஜித் அல்லாஹ்வை வணங்கும் புனிதஸ்தலமாகும். அதில் இஃதிகாப் நிய்யத்துடன் இருப்பதே சுன்னதான விடயமாகும். இறைநேசர்கள்தான் அடிக்கடி மஸ்ஜிதுடன் தொடர்புடையோராக இருப்பர். அவ்வாறு மஸ்ஜிதோடு தொடர்புடையோர் மறுமையில் இறையருளுக்குரியோராவர்.
5. தனிமையில் இறை சிந்தனையில் இருந்து இரு கண்களிலிருந்தும் கண்ணீர் சிந்திய மனிதன்.
மலக்குகள் பாவம் செய்யாதவர்கள் இறைக் கட்டளைகளை நிறைவேற்றிக் கொண்டே இருப்பர். மாறு செய்ய மாட்டார்கள். நபிமார்கள் மனிதர்கள் என்றாலும் இறைக்கட்டளைக்கு மாற்றம் செய்யாத மனிதப் புனிதர்களாவர். ஆனால் மனிதர்களோ பாவம் செய்யும் இயல்புடையவர்கள். சைத்தான் மனிதர்களைக் கெடுப்பதில் வல்லவன்.
நல்லடியார்களைத் தவிர எந்த மனிதனும் சைத்தானின் வலையில் சிக்காது தப்பித்துக் கொள்ள முடியாது. என்றாலும் அல்லாஹ் இரக்கமுள்ளவன் பாவங்களை மன்னிக்கக் கூடியவன்.
ஒரு மனிதன் தனிமையிலிருந்து தான் செய்த பாவத்தை நினைத்து கண்ணீர் வடித்து துஆக் கேட்கும் போது அதை மன்னிப்பதோடு மறுமையில் நிழலில்லாத நேரத்தில் தனது நிழலை அம்மனிதனுக்களிக்கிறான்.
6. நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஓர் அழகிய பெண் (தீய செயலுக்காக) ஒருவரை அழைக்கும் போது ‘நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்’ என்ற மனிதன்.
ஓர் ஆணும் பெண்ணும் தனிமையில் இருக்கும் போது அவ்விருவருக்குமிடையில் சைத்தான் இருக்கிறான் என்பது நபி வாக்காகும். தனிமையான ஓர் இடத்தில் பிறர் அறிந்து கொள்ளாத ஒரு சந்தர்ப்பத்தில் ஓர் அழகி தீய &:கிலிலீடுபட அழைக்கும் போது அல்லாஹ்வைப் பயந்து அத்தீய செயலிலிருந்து தப்பிக்கொள்ள ஓர் இறை பக்தியுள்ள மனிதனாலேயே முடியும். “யார் தனது இறைவனின் முன்னிலையில் நிற்பதைப் பயந்து (கீழ்த்தரமான) ஆசையை விட்டும் தன்னைத்தடுத்துக் கொள்கிறானோ அவன் செய்றடையும் இடம் சுவர்க்கமாகும்.” 79:40, 41
இறையச்சம் காரணமாக மனதைக் கட்டுப்படுத்தி தீய செயலிலீடுபடாது கட்டுப்பாட்டுடன் நடக்கும் மனிதனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தைக் கொடுப்பதுடன் அவனது நிழலையுமழிக்கின்றான்.
7. வலது கை கொடுப்பதை இடது கை அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்யும் மனிதன் தர்மம் செய்யும் போது இரகசியமாகவும் கொடுக்கலாம். பரகசியமாகவும் கொடுக்கலாம். ‘தர்மங்களை நீங்கள் பகிரங்கமாகக் கொடுத்தால் அதுவும் நல்லதே. அதை மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிக நல்லது. 2: 271
எண்ணத்தைப் பொறுத்தே தர்மத்தின் நன்மை கிடைக்கும். மனிதர்களிடம் மதிப்பு மரியாதையை நாடி தர்மம் செய்பவர்களுக்கு அவை கிடைக்கும். இறைவனிடமிருந்து நன்மை கிடைக்காது. தான் கொடுப்பதைக் கண்டு மற்றவர்களும் ஏழைகளுக்குதவ வேண்டுமென்ற நன் நோக்குடன் கொடுப்பது நல்லதே.
இறைவனிடம் நற்கூலியை எதிர்பார்த்து ஏழைகளுக்கு இரகசியமாகக் கொடுப்பது மிக நன்று. இவ்வாறு தூய எண்ணத்துடன் இரகசியமாக தர்மம் செய்பவர்கள் மறுமையில் நிழலே இல்லாத வேளையில் அல்லாஹ்வின் நிழலைப்பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தைப்பெற்றுக் கொள்கின்றனர்.
நாங்களும் இந்த நல்லோர் கூட்டத்தில் சேர்ந்து கொள்ள எல்லாம்வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக